நெல்சன் மண்டேலா அவர்கள் தென் ஆபிரிக்காவில் கியுசெ என்னுமிடத்தில் 1918 யூலை 18 ஆம் திகதி பிறந்தார். தந்தையார் அரச தொழில் புரிபவராக இருந்தமையினால் உயர்கல்வி கற்று சட்ட வல்லுநர் ஆனார். 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.
தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் தேவைக்காக முதன் முதலாக வழக்குறிஞர் ஒலிவர் தம்போவுடன் இணைந்து வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றை உருவாக்கி கறுப்பின மக்களை ஒன்று திரட்டி வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்தி அதில் வெற்றியும் கண்டார்.
இதனையடுத்து சாத்வீக வழிமுறைகள் ஊடாகப் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி 1963 இல் மண்டேலா உட்பட 10 முக்கிய ANC [ African National Congress ]தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன. இவ்வழக்கு 1963 இல் றிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது மண்டேலா அவர்கள், ‘நான் எனது வாழ்க்கை முழுவதையும் தென் ஆபிரிக்க மக்களின் உரிமைக்காகப் போராடுவதற்கு அர்ப்பணிக்கத் தயாராகவே இருக்கின்றேன். வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கத்திற்கு எதிராகவும் கறுப்பின மக்களின் உரிமைக்காகவும் போராடுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வழக்கு 1964 இல் முடிவடைந்த போது வெள்ளையரின் நீதிமன்று அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமையைக் காரணம் காட்டி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் தனது ஆயுள் தண்டனையை றொப்பன் தீவில் அனுபவித்திருந்தார். அவரது கைதி இலக்கம் 466/64. 27 வருட கொடுஞ் சிறைவாசத்தின் பின் 1990 ஆண்டு மாசி மாதம் 11 ஆம் திகதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் உலக ஜனநாயகவாதத்தின் சின்னமாகவே தெரியப்பட்டார். உலக நாடுகள் பலவற்றின் அழைப்பை ஏற்று உலக மக்களைக் கவர்ந்த ஓர் மா மனிதராக வலம் வந்தார். யூதர்கள் அதிகமாக வாழ்கின்ற நியூயோர்க் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய பிரதேசத்தில் ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என துணிவுடன் உரையாற்றி உலகத் தலைவர்களின் அணியில் முதன் நிலைக்கு உயர்த்தி புகழப்பட்டார். தென் ஆபிரிக்க மக்களுக்காக 27 வருடங்கள் கொடுஞ்சிறையில் வாழ்வை அர்ப்பணித்த விடுதலை வீரன் இன்னும் பல ஆண்டுகள் இப்பூமியில் நலமுடன் வாழ நாமும் வாழ்த்துவோம்.
உண்மையில் அமெரிக்க ஆட்சியாளர்களின் கோர முகத்தை உற்று நோக்கினால் அமெரிக்க அரசின் ஜனநாயகப் பயங்கரவாதத்தை இலகுவில் அடையாளம் காணலாம். உலகின் பயங்கரவாதிகள் எல்லோரும் அமெரிக்காவின் உற்ற நண்பர்கள். பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் உலகின் பயங்கரவாதத்திற்கு துணை போபவர்கள். அமெரிக்காவின் உற்ற நண்பர்கள் இதேபோல் மத்தியகிழக்கு இஸ்ரேல் அரசு, சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்ரினோ பினாச்சே என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஏன் அல் கைடாவின் பின்லாடன் கூட சி.ஐ.ஏ. இன் நெருங்கிய நண்பனே.
கேவலம் என்ன என்றால் இன்றும் கூட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுகின்றமையை அங்கீகரிக்கின்ற அல்லது ஆதரவு வழங்குகின்ற முதலாவது நாடு அமெரிக்காதான். காசா பிரதேசத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுத்த பெருமையும் அமெரிக்காவையே சேரும். இலங்கைத் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு விமானத்திலிருந்து குண்டு வீச கனவிலும் நினைவிலும் உதவுபவரும் இவரேயாவார். உலகின் ஜனநாயகப் போராட்டங்களை பயங்கரவாதப் பட்டியலிடும் இந்த அமெரிக்காவை விட வேறு யாரையும் இவ்வுலகில் குறிப்பிட முடியாது.
எவ்வளவு நாட்கள் சிந்தித்தார்களோ தெரியாது. இப்பொழுது மண்டேலா அவர்களை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். மேற்கத்தைய வெள்ளை இனத்தவர்கள் இந்த மனோநிலையில் இருந்து விடுபட இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் நியாயமான ஜனநாயகப் போராட்டங்கள் வெற்றியை அடைந்துள்ளன. அமெரிக்காவுக்கு தென்னாபிரிக்கா ஒரு முதல் பாடம் மட்டுமே. எமது விடுதலைப் போராட்டம் அடுத்த அத்தியாயம்.
திரு. மண்டேலா அவர்கள் 1999 இல் தனது முதலாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவுற்ற நிலையில் அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.மண்டேலா அவர்களின் 90 ஆவது வயதில் அமெரிக்க அரசனானது அவருக்கு எதிரான தடைகளை நீக்;கியதாக அறிக்கை வெளியிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியது. நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி அவருடைய அமைப்பான ANC யும் பயங்கரவாதத்திற்கு உதவும் அமைப்பு என 1950 களில் அமெரிக்க செனட் சபை அறிவித்து தடை விதித்திருந்தது.
எது எப்படி இருப்பினும் கறுப்பினச்; சிங்கம் என வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களுக்கு ஒரு ஆத்ம பலம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை
